search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் பிரபாகரன்"

    தேமுதிக கட்சியை யாராலும் அசைக்க முடியாது எனவும் விரைவில் நாங்கள் ஆட்சியை பிடிப்போம் எனவும் விஜயகாந்த் மகனான விஜய் பிரபாகரன் கூறியுள்ளார். #vijayprabhakaran #vijayakanth #DMDK
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அரசியலில் குதித்து வெற்றியை ருசித்தார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் அவர் எட்டி பிடித்தார்.

    விஜயகாந்தின் அரசியல் பயணத்தில் அவரது மனைவி பிரேமலதா கட்சி தொடங்கிய நாளில் இருந்தே உடன் இருக்கிறார். விஜயகாந்த் பங்கேற்கும் கூட்டங்களில் தவறாமல் அவரும் கலந்து கொள்வார்.

    விஜயகாந்த் பங்கேற்க முடியாத நிகழ்ச்சிகளில் பிரேமலதா தனியாகவும் கலந்து கொண்டு உள்ளார்.

    விஜயகாந்தின் மகன்களான விஜய் பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோர் அரசியல் வாடை இன்றியே இதுநாள் வரையில் இருந்து வந்தனர். இதனால் அவர்கள் அரசியல் பக்கம் தலைவைத்து படுக்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதனை பொய்யாக்கும் வகையில் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் திடீரென அரசியல் பிரவேசம் மேற்கொண்டுள்ளார்.

    விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் தே.மு.தி.க.வின் 14-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூரில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் விஜய் பிரபாகரன் கலந்து கொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அவரது பேச்சு வருமாறு:-

    சிறு வயதில் இருந்தே அப்பாவுடன் காஞ்சீபுரத்துக்கு அடிக்கடி சென்றுள்ளேன். எனக்கு பிடித்தமான ஊர் காஞ்சீபுரம்தான். ஏன் என்றால் சங்கர் படத்தை போல காஞ்சீபுரம் பிரமாண்டமாக காட்சி அளிக்கும்.

    இங்கு ஏராளமான மாணவ- மாணவிகள் வந்துள்ளீர்கள். எப்போதுமே ஒரு துறையில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. பல்வேறு துறைகளில் நமது கவனம் இருக்க வேண்டும். அப்போதுதான் எல்லா வி‌ஷயங்களையும் தெரிந்து கொண்டு ஜெயிக்க முடியும்.



    நான் படித்து முடித்தவுடன் ஏதாவது ஒரு வேலையில் சேர்த்து விடட்டுமா? என்று அப்பா கேட்டார். இதற்கு பதில் அளித்த நான், “விஜயகாந்த் மகனாக வெற்றி பெற விரும்பவில்லை. பிரபாகரனாகவே வெற்றி பெற விரும்புகிறேன் என்று கூறினேன்.

    எனது விருப்பப்படியே நான் விரும்பிய துறையை தேர்ந்தெடுக்க அனுமதி அளித்தார். எதுவாக இருந்தாலும் அடிப்படையில் இருந்தே செய்ய வேண்டும் என்று அப்பா கூறுவார். அதன்படி நான் செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளேன்.

    எனது தொழில் வி‌ஷயமாக அருகில் உள்ள பெங்களூருக்கு அடிக்கடி சென்று உள்ளேன். ஆனால் அங்குள்ள வளர்ச்சி சென்னையில் இல்லை. இது போன்ற வி‌ஷயங்கள் எல்லாம் மாற்ற வேண்டும்.

    எனக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன். அது புனிதமான பெயர். எப்போதுமே மனதுக்கு பிடித்த வி‌ஷயங்களை விரும்பி செய்வேன்.

    இப்போது நான் எந்த நாட்டுக்கு சென்றாலும் எனக்காக 100 பேர் அங்கு நிற்பார்கள். பேட்மிண்டன் போட்டிக்கான அணியை வாங்கி இருந்தேன். அதில் தான் பி.சி.சிந்து சாதித்து காட்டினார். எப்போதுமே ஒரே மாதிரி சிந்தனை இல்லாமல் மாற்றி மாற்றி யோசிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். பிடித்த வி‌ஷயத்தை செய்தால் அதில் எளிதாக வெற்றி பெற முடியும்.

    இப்போது தெரிந்தோ தெரியாமலோ எனக்கு பிடித்த இடத்தில் (அரசியல் மேடை) நின்று கொண்டு இருக்கிறேன். இதிலும் எனக்கு வெற்றி கிடைக்கும். எனக்கு வைத்துள்ள பிரபாகரன் என்ற பெயரை காப்பாற்றும் வகையில் செயல்படுவேன்.

    கூட்டத்துக்கு புறப்படும் போது அப்பா 2 வி‌ஷயங்களை என்னிடம் சொல்லி அனுப்பினார். கட்சியினரிடம் சீக்கிரம் வருவேன் என்று சொல்லு. கூட்டத்தை சீக்கிரம் முடிக்க சொல். மழை வருவது போல் இருக்கிறது. பெண்கள் எல்லாம் சீக்கிரம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்.

    நான் அவரிடம், “நமது கட்சி பெண்கள் எல்லாம் மிகவும் தைரியமானவர்கள். எதற்கும் பயப்பட மாட்டார்கள்” என்று சொன்னேன்.



    10 ஆயிரம் பேர் என்ன? ஒரு லட்சம் பேர் வந்தாலும் தே.மு.தி.க.வை அசைக்க முடியாது. அதில் இருந்து ஒரு செங்கலைகூட உருவ முடியாது. என்னோடு இணைந்து செயல்பட இளைஞர்கள் பலர் கைகோர்ப்பார்கள்.

    கண்டிப்பாக நான் சாதித்து காட்டுவேன். அதற்கு நீங்களும் கை கொடுக்க வேண்டும்.

    எனக்கு எப்போதுமே திமிரு அதிகம். அந்த திமிரோடு சொல்லிக் கொள்கிறேன். சத்தியமாக தே.மு. தி.க. ஆட்சியை பிடிக்கும். நீங்கள் எல்லோரும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அனகை முருகேசன் அங்கிளை எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் விரைவில் காலில் செருப்பு அணிவீர்கள். தாடியையும் எடுப்பீர்கள். இது நிச்சயம் நடக்கும்.

    இவ்வாறு விஜய் பிரபாகரன் பேசினார்.

    காஞ்சீபுரம் மாவட்ட தே.மு.தி.க. செயலாளரான அனகை முருகேசன் விஜயகாந்த் முதலமைச்சர் ஆகும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று சபதம் எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக விழா மேடையில் தே.மு.தி.க. நிர்வாகிளும், தொண்டர்களும் விஜய் பிரபாகரனுக்கு மாலைகள், சால்வைகளை அணிவித்து மலர் கிரீடம் சூட்டினார்கள். “தே.மு.தி.க.வின் எதிர் காலமே”, “இளைஞர்களின் எழுச்சி தளபதியே”, கேப்டனின் தளபதியே” என்பது போன்ற கோ‌ஷங்களையும் தொண்டர்கள் எழுப்பினர்.

    பின்னர் விஜய் பிரபாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட போகிறேன். எனக்கு இளைஞர் அணி பொறுப்பு கொடுக்கப்பட உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. பொறுப்பை தேடிப்போவது அரசியல் இல்லை, சேவையை தேடி வருவதுதான் அரசியல். மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்.

    அதற்காக நான் நிறைய திட்டங்களை வைத்துள்ளேன். அதை அனைத்தையும் செயல்படுத்தப்போகிறேன். கட்சியில் பொறுப்பு வகிப்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்.

    இது ஒருநாள் கூத்து இல்லை. என் அப்பா செய்யாததை நான் ஒன்றும் செய்து விடப்போவதில்லை. அவர் கட்சியில் செய்ததைத்தான் நானும் செய்யப்போகிறேன்.

    இதற்காக இளைஞர்கள் என்னுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #vijayprabhakaran #vijayakanth #DMDK
    தி.மு.க.வில் மு.கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவதைபோல விஜயகாந்தும் தனது மூத்த மகன் விஜய் பிரபாகரனை முன்னிலைப்படுத்த உள்ளார். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran
    சென்னை:

    தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய்பிரபாகரன் பேட்மிண்டன் அணி ஒன்றை நிர்வகித்து வருகிறார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் நாய்களையும் வளர்த்து வருகிறார்.

    தி.மு.க.வில் மு.கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவதைபோல விஜயகாந்தும் தனது மூத்த மகன் விஜய் பிரபாகரனை முன்னிலைப்படுத்த உள்ளார்.

    இன்று அனகாபுத்தூர் அம்மன் கோயில் திடலில் தே.மு.தி.க கட்சியின் 14-வது ஆண்டு விழா மற்றும் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் விஜய்பிரபாகரன் கலந்துகொள்ள உள்ளார். அவருக்கு இது முதல் மேடை என்பதால் எப்படி பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இதுகுறித்து மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:-

    ‘விஜய் பிரபாகரனை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என விஜயகாந்த் விரும்புகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் இந்த விருப்பம் உள்ளது. மகனுக்கு உடனடியாக பதவி கொடுத்து விட்டால் சர்ச்சையாகும் என்பதால் படிப்படியாக அரசியலில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளார்.

    விஜயகாந்துக்கு உருவான செல்வாக்கு அதன் பின்னர் அவரது கட்சியில் இருக்கும் யாருக்கும் உருவாகவில்லை. மகனை களம் இறக்கும்போது மக்களிடம் இழந்த செல்வாக்கையும் இளைஞர்கள் நம்பிக்கையையும் பெற முடியும் என்று நம்புகிறார். தனக்கு பின் கட்சியின் அதிகாரம் முழுவதையும் மகனுக்கு மாற்ற விரும்புகிறார்.


    விஜயகாந்த் சில மாதங்களுக்கு முன்னர் உட்கட்சி பிரச்சனையை ஆராயும் குழு என்ற குழுவைஅமைத்து அதன் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனை நியமித்தார். இந்த குழுவுக்கு வரும் புகார்கள் அனைத்தும் விஜய் பிரபாகரன் கவனத்துக்கும் செல்கிறது.

    அந்த புகார்கள் உடனடியாக விசாரிக்கப்பட்டு உண்மை இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்படி மெல்ல மெல்ல மகனை கட்சியின் முக்கிய இடத்திற்கு கொண்டு வருகிறார்’

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    விஜய் பிரபாகரன் கட்சிக்கு வந்தால் அவருக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்படலாம்? என்று கேட்டபோது:-

    கட்சியில் வெகுகாலமாக இளைஞரணி செயலாளர் பொறுப்பை தலைவர் காலியாகவே வைத்துள்ளார். யாரும் நியமிக்கப்படவில்லை. அந்த பொறுப்பில் விஜய் பிரபாகரன் நியமிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்று அவர்கள் கூறினர். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran
    சமூக வலைதளங்களில் விஜயகாந்த் பற்றி பரவி வரும் தகவலை அறிந்து அவரது மகன் விஜய் பிரபாகரன் வேதனையுடன் வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran
    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். நேற்றிரவு சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ‘மியாட்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தே.மு.தி.க. தலைமை கழகம் அறிவித்தது.

    சமூக வலைதளங்களில் விஜயகாந்த் பற்றி பரவி வரும் தகவலை அறிந்து அவரது மகன் விஜய் பிரபாகரன் வேதனையுடன் வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    கேப்டன் விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சீரியசாக இருப்பதாக தகவல் பரவி கொண்டு இருக்கிறது. அவர் நன்றாக இருக்கிறார். அவர் மருத்துவமனையில் நலமுடன் ராஜாபோல இருக்கிறார். அவருக்கு எதுவும் இல்லை. அவர் சீரியசாக இருந்தால் நான் அவருடன் இருக்க வேண்டும். ஆனால் நான் வேலை விசயமாக நெல்லூர் வந்து இருக்கிறேன். தேவையில்லாமல் தவறான தகவலை பரப்பி விடுவதால் உங்களுக்கு என்ன நன்மை?


    இந்த மக்களுக்காக கஷ்டப்பட்டு உழைத்த அப்பா உடல் நலம் சரியில்லாமல் இருந்தது உண்மைதான். ஆனால் வயதானவர் போல படுக்கையில் இருப்பதாக இஷ்டத்திற்கு பேசி வருவது வேதனை அளிக்கிறது. என் தந்தையை இப்படி கூறுவதன் மூலம் எந்த விதத்திற்கு எனக்கு வலிக்கும் என்பதை நீங்கள் உணரவில்லையா? உங்கள் வீட்டில் இப்படி யாருக்காவது இந்த நிலை ஏற்பட்டால் இப்படித்தான் பேசுவீர்களா, தேவையற்ற பேச்சுக்களால் மனவேதனை அடைகிறோம்.

    என் தந்தையை அம்மாவும் நாங்களும் அக்கறையுடன் பார்த்து வருகிறோம். அப்பாவிற்கு ஒன்றும் ஆகாது. மீண்டும் கேப்டன் வருவார் எல்லோர் முன்பும் நிற்பார். அவருக்கு ஒன்றும் ஆகாது, என் உயிரே போனாலும் அது நடக்கும். அதனால் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.

    அவரவருக்கு சுமை, வேலைகள் இருக்கிறது. அதை பாருங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதை போல ஆயிரம் மடங்கு நலமுடன் அவர் சீக்கிரம் வருவார். எனக்கு வேண்டியதெல்லாம் பாசிட்டிவ்வாக நினையுங்கள். அவரை நினைத்து பெருமைப்படுங்கள். நம்பிக்கை வையுங்கள். அவர் திரும்ப வருவார்.

    இவ்வாறு பேசினார். #DMDK #Vijayakanth #VijayPrabhakaran



    ×